search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி"

    • வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.
    • பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் கலாபவன் சோபி ஜார்ஜ்(வயது56). மலையாள பட இயக்குனர் மற்றும் நடிகரான இவர், தனது குடும்பத்தினருடன் கொல்லம் சாத்தன்னூர் நெல்லிமடம் காக்கநாடு பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் புல்ப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கிக்தருவதாக கூறி கடந்த 2021-2022 ஆண்டுகளில் சோபி ஜார்ஜ் ரூ.3லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி பணம் கொடுத்த நபருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.

    ஆகவே அந்த நபர் தன்னிடம் பணம் மோசடி செய்து விட்டதாக சுல்தான்பத்தேரி போலீஸ் நிலையத்தில் சோபி ஜார்ஜ் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சோபி ஜார்ஜை கைது செய்தனர்.

    வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரது விலையுயர்ந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சோபி ஜார்ஜ் இது போன்று வயநாடு பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வயநாட்டில் 6 வழக்குகள் உள்பட 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மோசடி புகார் தொடர்பாக சோபி ஜார்ஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பண மோசடி வழக்கில் நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
    • ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).

    இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.

    பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

    இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம்.
    • பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணத்தை தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி சமாதானப்படுத்தி கலெக்டரிடம் அழைத்துச் சென்றார்.

    கலெக்டர் சரயுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    அவரிடம் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என 13 கோடி ரூபாய்க்கு மேல் 305 நபர்கள் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.

    ஆனால் சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு பணத்தை பெற்று தரவில்லை.

    பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    • வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அதன் மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இந்த உண்மை வங்கியில் நடைபெற்ற தணிக்கை பணியின் போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்தையும் தனது மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

    அவ்வாறு கிடைத்த பணத்தை கொண்டு சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் மீதும் அவருக்கு உதவியதாக லட்சுமணன், சியர்ல தினா சுமதி ஆகிய 3 பேர் மீதும் கிளை மேலாளர் பெருகினியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 துணி ரோல்கள் வேண்டும் என்று பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் டிப் டாப் ஆசாமி.
    • திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் துணி வாங்கிக் கொண்டு பணம் செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் சிவன் தியேட்டர்- பிச்சம்பாளையம் ரோட்டில் பிரபல பாலியஸ்டர் துணி விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் துணி வாங்க வருவதால் எந்த நேரமும் பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திற்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் துணி வாங்க சென்றுள்ளார்.

    அவர் வழக்கம் போல எல்லா வாடிக்கையாளரையும் போன்று தனக்கு தேவையான துணிகளை பார்வையிட்டுள்ளார். பின்னர் 5 துணி ரோல்கள் வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் அந்த டிப்டாப் ஆசாமி. இதைத் தொடர்ந்து தான் பணம் செலுத்திவிட்டு வருவதாகவும், அதற்குள் துணி ரோல்களை தனது காரில் ஏற்றுமாறும் அந்த ஆசாமி கூறி உள்ளார். இதை நம்பிய ஊழியர் அந்த துணிகளை அவருடைய காரில் ஏற்றி உள்ளார்.

    ஆனால் அந்த டிப்டாப் ஆசாமி பணத்தை செலுத்தாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி அங்கிருந்து சிட்டாக பறந்தார். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் துணிகளை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தை செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமியின் வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
    • கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ஹரிசேகரன். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மேலும் இவர் மறைந்த தமிழக மந்திரி கக்கனின் உறவினர் ஆவார். இவரது பெயரில் பேஸ்புக் வலைதள பக்கத்தில் போலி கணக்கு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த கணக்கை கொண்டு பலரிடம் அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக ஹரிசேகரன் போல் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதை நம்பிய சிலர் அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சந்தேகம் அடைந்த சிலர் இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி.க்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவர் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹரிசேகரன் பெயரில் 6 போலி பேஸ்புக் வலைத்தள கணக்குகள் செயல்பாட்டில் இருந்ததும், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பயன்படுத்தி பண மோசடி கும்பல் கைவரிசை காட்டியதும் தெரிந்தது.

    இதையடுத்து மோசடி கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
    • டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர்.

    செந்துறை:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தன்வீர்(வயது 35). இவர் தற்போது அரியலூர் ஜெஜெ நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து, அவர் அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு லாப தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது தன்வீர் இது குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மர்ம கும்பல் இணையம் வழியாக இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளது. இதை தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 56 யை போலீசார் முடக்கம் செய்தனர். வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    மாலிக் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3 ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் அதிகளவில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

    இதற்காக டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். இதற்காக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிலரை வேலைக்கு சேர்த்தனர்.

    அவர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கினர். மேலும் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 15 சிம்கார்டுகள்,8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு காசோலை புத்தகம், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள மும்பையை சேர்ந்து க்ளோன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
    • போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை துறையில் வெளிநாட்டுக்கு ஆர்டரின் பேரில் பனியன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டிற்கு தேவையான பனியன்களை உற்பத்தி செய்வதற்கென உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தியாகும் பனியன் பொருட்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) கடந்த ஜூலை மாதம் 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5, 12, 18 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதன்படி பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை எடுத்து சென்றாலோ மின்னணு வழி ரசீது உருவாக்க ப்படவேண்டும் என 2018ம் ஆண்டு முதல் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து வணிக வரித்துறையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தினர். இதனிடையே போலி ஜி.எஸ்.டி., பில்களை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து திருப்பூரை அதிர வைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை பெற திருப்பூர் சாயப்பட்டறை வீதி பெத்தச்செட்டிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவர் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்தது.

    இதையடுத்து தீவிரமாக விசாரித்ததில் மேற்படி சாயப்பட்டறை வீதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அரசின் நல உதவி திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறி பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றை பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இந்த போலி ஜி.எஸ்.டி.யை உருவாக்கினார்களா என அப்பகுதி பெண்கள் சந்தேகிக்கின்றனர்.

    நடராஜா தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் குடியிருந்து வந்த ஏழை பெண்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்த போது தான் மேற்படி பிரச்சனை பூதாகாரமாக வெடித்துள்ளது.

    மேலும் ஜிஎஸ்டி., கணக்கு துவங்க நிலையான முகவரியை எவ்வாறு வணிக வரித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிமைத்தொகையை அரசு வழங்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி இணை இயக்குநர் முருககுமாரிடம் கேட்டபோது, திருப்பூரில், போலி ஜி.எஸ்.டி., மூலம் மோசடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளது. எத்தனை பேர் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும். விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு இல்லாமல் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை வழங்கியது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஜிஎஸ்டி., சான்றிதழ்களை ரத்து செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • புதுவையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 61). இவர் புதுவையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.

    இந்த நிலையில் வைத்தியநாதன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினார்.

    தங்களது வங்கிக்கணக்கு காலாவதி ஆகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ரகசிய எண் (ஓ.டி.பி.) வரும். அதை சொன்னால் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய வைத்தியநாதன் செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண், ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் இணைப்பை துண்டித்தார். அடுத்த சில நிமிடங்களில் வைத்தியநாதன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்திய நாதன் தன்னுடன் பேசிய வங்கி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார்.

    ஆனால் அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. வங்கி மேலாளர் போல் மர்மநபர் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைத்தியநாதன், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ளாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.

    • இங்கிலாந்து அரச குடும்பத்தினர் இவர்களின் வாடிக்கையாளர்கள்
    • 20 நிமிடங்களில் கணக்கிலிருந்து ரூ. 16,18,31,197.92 காணாமல் போனது

    ஒப்பனை சாதனங்களில் உயர்ரக தலை வாரும் சீப்புகள் மற்றும் பிரஷ் போன்ற 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல இங்கிலாந்து நிறுவனம், கென்ட் பிரஷஸ் (Kent Brushes). 1777ல் தொடங்கபட்ட இந்நிறுவனம், இத்தொழிலில் 245 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவர் ஸ்டீவ் ரைட் (Steve Wright).

    இவர்களின் வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பார்க்லே வங்கி கையாண்டு வந்தது.

    கடந்த ஜூலை மாதம், அந்நிறுவன நிதி நிர்வாக அதிகாரிக்கு, வங்கியிலிருந்து அழைப்பதாக தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கி பணம் களவாடப்படும் சூழல் இருப்பதாகவும் அதனை தடுக்க சில தரவுகள் தேவை எனவும் அந்த அழைப்பில் கேட்கப்பட்டது. அதை நம்பிய அவர், கேட்கப்பட்ட விவரங்களை தொலைபேசியிலேயே வழங்கினார். கடவுச்சொல் உட்பட முக்கிய தகவல்கள் கேட்கப்பட்டதால் அதனையும் தெரிவித்தார்.

    இதையடுத்த 20 நிமிடங்களில் அந்நிறுவன வங்கி கணக்கிலிருந்து ரூ.16,18,31,197.92 (1.6 மில்லியன் பவுண்ட்) தொகை காணாமல் போனது.

    அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி ஸ்டீவ் ரைட்டிற்கு தகவல் தர, அவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து ஸ்டீவ் ரைட் கூறியதாவது:

    பார்க்லே வங்கி எங்கள் பணத்தை மீண்டும் வழங்கி விடும் என நம்பினோம். ஆனால், இதுவரை வங்கி எங்கள் இழப்பிற்கு ஈடு எதுவும் தரவில்லை; காவல்துறையும் எவரையும் கைது செய்யவில்லை. இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிக பெரும் குற்றத்தை துப்புதுலக்க இது வழிமுறை அல்ல. புகார் அளித்த ஒரு மாதம் கடந்து "வழக்கு முடிந்து விட்டது" (case closed) என வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தது; அவ்வளவுதான். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான குற்றங்கள் தரப்பட வேண்டும்.

    இவ்வாறு ஸ்டீவ் தெரிவித்தார்.

    "எந்த வாடிக்கையாளரிடமும் கடவு சொல் உட்பட முக்கிய விவரங்களை எந்த வங்கியும் கேட்பதில்லை. இது போன்ற மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்பது மட்டுமே பார்க்லே வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் அதிக அளவில் இத்தகைய மோசடிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது இங்கிலாந்திலும் போலி தொலைபேசி அழைப்பு மூலம் இது போன்ற மோசடிகள் நடைபெறுவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    • மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (30), பட்டதாரி. இவரது உறவினர் முருங்கப்பட்டி பாறைக்காட்டை சேர்ந்தவர் கணேசன் (45), இவரது மனைவி அமுதவள்ளி (36), இவர் பொத்தாம்பட்டியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கோவிந்தராஜிடம், வருவாய் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது, அப்பதவியை பெற தலா 5 லட்சம் வீதம் 7 பேருக்கு 35 லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே பணியை வாங்கி தருகிறேன் என கணேசன் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி ஆகியோர் கூறினர்.

    இதை உண்மை என நம்பிய கோவிந்தராஜ் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை பெற்ற தம்பதியினர் 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது போல் போலி நியமன உத்தரவு, வருவாய் துறை அடையாள அட்டையை வழங்கினர்.

    இதை பெற்ற கோவிந்தராஜ் ஜூலை 20-ந்தேதி நாமக்கல் தாலுகா அலுலகத்திற்கு சென்ற போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேசன், அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கோவிந்த ராஜ் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறவைாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயரட்சகன் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆனந்த ரங்கப்பிள்ளை நகரை சேர்ந்தவர் ஜெயரட்சகன். (வயது 46).

    இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்துவிட்டு தற்போது புதுவையில் தங்கி ஆன்லைனில் முதலீடு செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக தனியார் நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் வந்த நபர் நான் தென்னிந்தியாவிற்கான தனியார் நிறுவனத்தின் நிர்வாகி என்றும் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

    அதை நம்பிய ஜெயரட்சகன் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

    அப்போதைய மார்க்கெட் ஒரு டாலரின் மதிப்பு ரூ.88 என்றும் இருந்தபோதும் தொடர்பு கொண்ட நபர் ரூ. 85-க்கு டாலர் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி, ஜெயரட்சகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் சொன்ன 4 வங்கி கணக்குகளுக்கு செலுத்தி உள்ளார்.

    இவர் பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×