செய்திகள்

மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2019-06-25 03:16 GMT   |   Update On 2019-06-25 03:16 GMT
சுப்ரீம் கோர்ட்டை உடனே அணுகி மேகதாது அணை கட்டுவதில் தாமதமின்றி தடை உத்தரவு பெற வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், காவிரி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின்படியும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரைக் குறைக்கும் விதத்தில் எந்த அணைகளையும் கர்நாடக மாநில அரசு கட்டக்கூடாது என்று கூறியிருந்த போதிலும், “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று தொடர்ந்து கர்நாடக அரசு, மனிதாபிமானம் சிறிதும் இன்றி வேண்டும் என்றே அடம்பிடித்து வருவதும், அதற்குத் திரைமறைவில் மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக ஆதரவுக்கரம் நீட்டி வருவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தபோது தமிழகம் கடுமையாக எதிர்த்தது. மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரியே “தமிழகத்தின் கருத்துக்களைக் கேட்காமல், காவிரி நதிநீர் பாயும் மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தாமல், மேகதாது அணை கட்ட அனுமதிக்கப்பட மாட்டாது” என்று ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அதுமட்டுமின்றி “புதிய அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவெடுக்கும்” என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் இதையெல்லாம் ஒதுக்கிவைத்து அலட்சியப்படுத்திவிட்டு, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி சதானந்த கவுடா, “மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரத் தயார்” என்று தன்னிச்சையாகப் பேட்டி கொடுத்து அவர் அனைத்து மாநிலங்களுக்குமான மந்திரி அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார்.



இந்நிலையில் கர்நாடக அரசின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச்சூழல் அனுமதி கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது இருமாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்டவிரோதச் செயலாகவே தி.மு.க. கருதுகிறது. ஆகவே, தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு மேகதாது அணை பிரச்சினையில் இப்போதும் மெத்தனமாக இருக்காமல் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, மேகதாது அணை கட்டுவதற்கு தாமதமின்றி தடை உத்தரவினை பெற்றிட வேண்டும்.

காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சியாகும்.

ஆகவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவினை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கர்நாடக அரசின் கடிதத்தை நிராகரித்து, “மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புறச் சூழல் அனுமதியைக் கொடுக்க முடியாது” என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரைக்கூட திறந்துவிடாமல், புதிய அணை கட்டினால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று ஒரு அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது, அரசியல் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயல். காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசு, இரு மாநில உறவுகளைப் பாதிக்கும் இத்தகைய முரண்பட்ட செயல்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

Similar News