செய்திகள்

சிவகிரியில் பணத் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

Published On 2019-06-24 13:00 GMT   |   Update On 2019-06-24 13:00 GMT
சிவகிரியில் பணத் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகிரி:

சிவகிரி குமாரபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான கிணறு வயல்வெளிகுளம் பகுதியில் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து சிவகிரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த கட்டபொம்மன் என்பவர் பணம் கொடுத்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

ஆனால் தண்ணீர் பாய்ச்சுவதற்கான பணத்தை முனியாண்டிக்கு அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நேற்று மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த கட்டபொம்மன் அரிவாளால் முனியாண்டி கையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

இதில் பலத்த காயம் அடைந்த முனியாண்டியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் துரை சிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கட்டபொம்மனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News