நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை
நிலக்கோட்டை:
வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாளக்காள் (வயது 29). இவருக்கு மாரிச்சாமி என்பவருடன் திருமணம் நடந்து விவாகரத்து பெற்றார். பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.
குழந்தை இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. பெருமாளக்காள் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அவரை பெரியவர்கள் சமரசப்படுத்தி மீண்டும் ஆனஸ்ட்ராஜூடன் சேர்த்து வைத்தனர். தற்போது ஆனஸ்ட்ராஜ் மற்றும் குடும்பத்தினர் பெருமாளக்காளிடம் அவரது பெற்றோரிடம் பணம் பெற்று வரக் கூறி கொடுமைபடுத்தியுள்ளனர்.
இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லதா இளம்பெண்ணை சித்ரவதை செய்த ஆனஸ்ட்ராஜ், அவரது பெற்றோர் முனியம்மாள், செல்வம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
இதேபோல் நிலக்கோட்டை அருகே குரும்பபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி முருகேஸ்வரி (35). இவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது பாண்டி தனது மகனுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது முருகேஸ்வரி தன்னை கொடுமைபடுத்தியதாக கணவர் பாண்டி உள்பட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.