செய்திகள்

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம்- பாரதீய ஜனதா அறிவிப்பு

Published On 2019-06-07 13:11 GMT   |   Update On 2019-06-07 13:11 GMT
புதுவையில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக்குக்கு தடை என்று ஆணை வெளியிடப்பட்டது. அதை ஆளும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. தடை என்ற பெயரில் பல கோடி ஊழல் நடந்துள்ளது.

புதுவை அரசும், அதன் அமைச்சர்களும் தங்கள் பதவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்யவில்லை. மாறாக வியாபாரம் செய்து வருகின்றனர்.

நகரில் தினசரி 20 டன் பிளாஸ்டிக் குப்பை சேர்ந்து சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்கிறது. நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. நகர் முழுவதும் தொடர்ந்து பிளாஸ்டிக் பை குப்பையாக காட்சியளிக்கிறது.

மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் தடைகளுக்கு ஆதரவு இருந்தும் அதை சரியாக பயன்படுத்தவில்லை. தமிழகத்தில் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, துணிப்பை, பேப்பர் பை போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

அழகு மிகுந்த புதுவை மாநிலம் சுற்றுலா தளமாக காட்சியளித்து வந்தது. ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசு புதுவை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கும் வகையில் மாற்றி வருகிறது. மக்கள் நலன் கருதி உடனே பிளாஸ்டிக் தடையை புதுவையில் அமல்படுத்த வேண்டும்.

அவ்வாறு அமல்படுத்தாமல் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News