search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் தடை"

    • தடைகள் இருந்த போதிலும், சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது
    • பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன

    பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. சிறிய பொருட்கள் வாங்கினாலும், அதற்கு பிளாஸ்டிக் பேக் கேட்பவர்கள், அதை பொது வெளியில் வீசி எறிந்துவிடுகின்றனர்.

    மக்காத இந்த பிளாஸ்டிக் மண்ணில் புதைந்து நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், கால்நடைகளை அதில் ஒட்டியிருக்கும் உணவு பொருட்களை உண்பதுடன், அந்த பிளாஸ்டிக் பேக்குகளையும் சேர்த்து உண்கிறது. இதனால் ஜீரணம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது.

    அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. சாலையில் அலைந்து திரிந்த ஒரு மாட்டின் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியதால், உடல் நலமின்றி காணப்பட்டுள்ளது.

    அந்த மாட்டை கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் வயிறுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளதை கண்டுபிடித்து, அறுசை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவு வந்து கொண்டே இருந்துள்ளது.

    சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இதுபோன்று கடந்த வருடம் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்ததாக தெரிவித்தனர்.

    • ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது.
    • எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ளபடி பாலி எதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடைகொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாளுவதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தற்போது நெய்யப்பட்ட பைகள் அல்லது ரபியன் பைகள் என்ற பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள், விற்பனையாளர்களிடமும், கடைக்காரர்களிடமும் பூ, உணவு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, முதலியவைகளை விநியோகிக்க உபயோகப்படுகின்றது. இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்பட்டு குப்பையாக மாறிவிடுகிறது. இவ்வாறு குப்பையாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகள் ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரிப்ப தோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும். 

    ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்று வதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடை யை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு லியுறுத்துகிறது. எனவே உலகம் எதிர்கொ ள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்று வதற்கு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம் என உறுதிமொழி மேற்கொ ள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
    • நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.

    சென்னை:

    நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

    மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பறவைகள், விலங்குகள், கடல்வாழ் உரியிரினங்கள் ஆகியவற்றின் கழிவுகளிலும் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

    இந்த நிலையில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர்பானம் குடிப்பது, பிளாஸ்டிக் பார்சல்களில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆரோக்கியமாக இருக்கும் 22 பேரை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். இதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது தெரியவந்தது. இதில் குளிர்பான பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் 50 சதவீதம் அளவுக்கு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு அடுத்த படியாக உணவு பார்சல், டீ, காபி கப்புகள், தண்ணீர் பாட்டில்களின் பிளாஸ்டிக் கலந்துள்ளது. மேலும் 23 சதவீத பிளாஸ்டிக், பழங்களை பார்சல் செய்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும்.

    உணவு, தண்ணீர், காற்று மாசு ஆகிய 3 வழிகள் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனிதனின் உடலில் கலக்கின்றன. இதில் காற்று மாசு என்பது சுவாசத்தின் மூலம் நுரையீரல் வழியாக ரத்தத்தை அடைகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர், குளிர் பானம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் அதிக பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருந்தால் வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் காற்றுமாசுவில் இருந்து தப்பிக்க முடியும்.

    பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில்களை பயன்படுத்துவதால் குழந்தைகள் பிளாஸ்டிக் நுண்துகள்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பது என்பது ஆபத்தானது. மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பதால் உடல் உறுப்புகளை பாதிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அது என்னென்ன உடல் உறுப்புகளை பாதிக்கும் என்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை தொழிற்சாலைகளிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி, உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாசுகட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்டுள்ளது.

    இதன்படி பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் குறித்து ஊழியர்களுக்கு காட்சி ஊடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நீக்க அதிகாரி நியமிக்க வேண்டும்.

    குடிநீர்பாட்டில் பயன்பாடை தடுத்து, கண்ணாடி பாட்டில் பயன்படுத்த வேண்டும். காவலாளிகள் தொழிலாளர்களை பரிசோதித்து பிளாஸ்டிக் கொண்டுவருவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தொழிற்சாலை அறிவிப்பை முகப்பில் வைக்க வேண்டும்.

    தொழிற்சாலை விழாக்கள், கூட்டங்களில் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனை த்து தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

    • வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
    • ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.இது குறித்த துண்டு பிரசுரங்களை வியாபாரிகள்,மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஷ்குமார், ஜோதிமணி முத்துசாமி,சாந்தி ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்று ஐகோர்ட் கருத்து
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கவேண்டும்

    சென்னை:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்று பொருட்களை பிரபலப்படுத்துவது தொடர்பான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையை ஐகோர்ட் பாராட்டியது. அதேசமயம், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கும் படி ஊராட்சி செயலாளர் மொய்தீனிடம் ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 8 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    • மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • கடை உரிமையாளர்களிடம் இருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 28 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    மெரினா கடற்கரையில் 14.09.2022 முதல் 21.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 272 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 14 கடை உரிமையாளர்களிடம் இருந்து 11 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 245 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 30 கடை உரிமையாளர்களிடம் இருந்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குப்பைத்தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 14.09.2022 முதல் 20.09.2022 வரை ஒரு வாரத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 7,479 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 2,601 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கடை உரிமையாளர்களிடம் இருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலா நகரான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கொடைக்கானலில் மதுபாட்டில்களை உபயோகித்தபின் அதனை திரும்ப ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது.

    கொடைக்கானல்:

    சுற்றுலா நகரான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் கொண்டுவருவதை தடுக்க சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. இதுதவிர கொடைக்கானலில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி உபயோகித்தபின் வீசி எரிவதை தடுக்க அதனை திரும்ப ஒப்படைத்து பணம் பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் அமலில் உள்ளது.

    இருந்தபோதும் நகரின் பல்வேறு சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறிகிடப்பதை காணமுடிகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இதனை உண்ணும் வனவிலங்குகளும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானல் வந்த அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி கடந்த சில நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருகிறார்.

    பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதனை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இயற்கையை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா இளைஞர் ஏற்படுத்தி வரும் நூதன விழிப்புணர்வு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    • உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம் என்பது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினர். அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    அதற்கு தமிழக அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

    அப்போது பேசிய நீதிபதிகள் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வாட்டன் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அறிக்கையில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

    மேலும், பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க ரயில், பேருந்து நிலையம், சுற்றுலா தலங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
    • நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய, மாநில அரசு தரப்பு வக்கீல்களிடம் நீதிபதிகள் கூறியதாவது:-

    மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு கொண்டு வந்தால் என்ன?

    விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஆலோசனைகளை உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ் துறை மூலம் வழங்கலாமே? பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் மாற்று பொருட்களை பயன்படுத்தும்படி அவர்களுக்கு அறிவுரை வழங்கலாமே?

    தமிழ்நாட்டில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதற்கு, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

    இதேபோல மத்திய அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், "பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் மட்டும் தான் அமலில் உள்ளதே தவிர, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை யார் உறுதி செய்வார்கள்? அதற்கு யார் பொறுப்பான அதிகாரி?" என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பினர்.

    பின்னர், "பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா, இல்லையா? அல்லது உற்பத்தியை அனுமதித்து, அதை புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா? என்பதை மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5,850 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கள ஆய்வுகளில் 6 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5,850 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக், மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×