செய்திகள்

ரூ.22 கோடி அமலாக்கத்துறை முடக்கியது புதிய தகவல் அல்ல- கார்த்தி சிதம்பரம் விளக்கம்

Published On 2019-03-30 07:47 GMT   |   Update On 2019-03-30 07:47 GMT
தனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
மதுரை:

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதன் மூலம் அவர் நடத்தும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது வக்கீல் அருண் நடராஜன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-



கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல. இது பழைய செய்தி ஆகும்.

6 மாதங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது. அவ்வளவு தான். இது நீதிமன்ற உத்தரவு அல்ல.

மேலும் இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே தான் இருக்கிறது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு கோர்ட்டு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு வக்கீல் கூறியுள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
Tags:    

Similar News