செய்திகள்

காங்கிரஸ், திமுக தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர் - மத்திய மந்திரி பியூஸ் கோயல் தாக்கு

Published On 2019-03-28 05:04 GMT   |   Update On 2019-03-28 05:04 GMT
பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். #bjp #parliamentelection #PiyushGoyal
நாகர்கோவில்:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் பிரசாரம் செய்தார்.

நாகராஜா திடலில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் நல்ல கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி வருகிற தேர்தலில் அமோக வெற்றியை பெறும். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் வீடுகள் இருக்க வேண்டும். எல்லோருக்கும் கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர், சாலை வசதி, ரெயில் வசதி அமைய வேண்டும்.

நாடு சாதி, மத, இன உணர்வு இல்லாத வகையில் தன்னிறைவு பெற்று திகழ வேண்டும். இதற்காகதான் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். அவர் கொண்டு வந்த ஆயூஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். 10 கோடிக்கும் மேல் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

80 கோடிக்கும் அதிகமானோருக்கு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாக்குறுதிகளை அளித்தால் அதை செய்து முடிப்பார். இப்போது அதனை செய்தும் முடித்துள்ளார்.

பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர். நிலக்கரி ஊழல் மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடியை இழந்துள்ளோம். வெளிப்படை தன்மை இல்லாததால் 2ஜி மூலம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடியை இழந்தோம்.

கோப்புப்படம்

ஏழை மக்களின் பணத்தை சுரண்டிய காங்கிரஸ், தி.மு.க.வினருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க நாம் மேல்முறையீடு செய்துள்ளோம்.

பாரதிய ஜனதா தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மீனவர்களுக்கு தனித்துறை அமைக்கப்படும் என அறிவித்துள்ளோம். மீனவர்கள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம்.

விவசாயிகளுக்கு விவசாய அட்டை வழங்குவதை போல மீனவர்களுக்கும் அட்டை வழங்கப்படும். மீனவர்களுக்கு வங்கியில் அளிக்கப்படும் கடன்களுக்கு 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளோம்.

குமரி மாவட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்திய நாட்டில் இன்னும் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்த பொன். ராதாகிருஷ்ணன் இங்கு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #bjp #parliamentelection #PiyushGoyal
Tags:    

Similar News