search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பியூஸ் கோயல்"

    • இந்திய உணவுக் கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது
    • இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது

    சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையை மாற்றி அமைத்து, இந்தியாவின் உணவுத்தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யும் நோக்கில், அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அரசு, 1965-ம்ஆண்டு இந்திய உணவுக் கழகத்தை (எஃப்சிஐ) உருவாக்கியது. இந்திய உணவுக் கழகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது.

    இந்தக் கழகம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உணவுக் கழகத்தின் பங்களிப்பு குறித்துப் பேசினார்.

    அவர் பேசியதாவது, "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அங்கமாக உணவுக் கழகம் உள்ளது. உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, ஏழை மக்களுக்கு விநியோகிப்பதில் அதன் சாதனை வரலாற்று முக்கியத்துவமிக்கது. இந்தக் கழகம் வழியே இந்தியாவின் உணவு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

    மேலும், சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊழலற்ற நிர்வாகம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

    • வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க முயற்சித்து வருகிறார்கள்.
    • கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் தே.மு.தி.க. கறாராக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பியூஷ்கோயல் இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பியூஷ்கோயல்தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அந்த வகையில் தே.மு.தி.க.வுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

    வருகிற தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க முயற்சித்து வருகிறார்கள். நேற்று மாலையில் விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற பியூஷ்கோயல் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார். அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் கரு.நாகராஜன், காளிதாஸ், அதேபோல் தே.மு.தி.க. நிர்வாகி பார்த்தசாரதி ஆகியோரும் உடன் இருந்தார்கள். சாதாரணமாக அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

    பின்னர் பியூஷ்கோயல், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகிய 3 பேரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பின் போது பா.ஜனதா கூட்டணிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி எண்ணிக்கை பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்பு பற்றி கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷிடம் பியூஷ்கோயல் தெரிவிப்பார். பொங்கலுக்கு பிறகு பி.எல்.சந்தோஷ் சென்னை வர உள்ளார். அப்போது தமிழக நிர்வாகிகளுடனும் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவது பற்றிய பேச்சுக்கள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் தே.மு.தி.க. கறாராக இருந்தது. ஆனால் இப்போது கட்சி பலவீனம் அடைந்துள்ளது. ஏற்கனவே தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கு பற்றி அண்ணாமலை தனியாக ஆய்வு நடத்தி புள்ளி விபரங்களுடன் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
    • மத்திய அரசின் கையிருப்பில் இருந்து உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பண வீக்கத்தைப் பொறுத்த வரையில், 2023 மே மாதத்தில், தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65 சதவீதம் ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56 சதவீதம் ஆகவும் இருந்தது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, மசூர் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது.

    இதுதொடர்பாக 10.7.2023 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்திட உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கூறிய சில உணவுப் பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இந்தப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப் படுத்தப்படும். இந்த விஷயத்தில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மந்திரி உடனடியாகத் தலையிட வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    • மூத்த தலைவர்கள் பலர் மன்னிப்பு கேட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
    • ராகுல்காந்தி பாராளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்தி வருகிறார்.

    புதுடெல்லி :

    மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். பியூஸ் கோயல் கூறியதாவது:-

    ராகுல்காந்தி லண்டனில் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் அடிப்படையற்றவை. அதைக்கேட்டு, ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. நாடாளுமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அவர் இழிவுபடுத்தி விட்டார். தனது செயலுக்கு சிறிதும் வருந்தாமல், ஏதோ பெரிய தேசபக்த காரியத்தை செய்ததுபோல் அவர் நடந்து கொள்கிறார். அவர் முதலில் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    இதற்கு முன்பு இந்தியாவின் நற்பெயர் மீது இந்த அளவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை. அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் ஜனநாயகம் மோசமாக இருப்பதாக காட்டி, வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை கோருவது போன்ற கடுமையான குற்றம் வேறு இல்லை.ஜனநாயகத்தின் தாய் என்று உலகமே ஒப்புக்கொண்ட இந்தியாவை ராகுல்காந்தி இழிவுபடுத்தி இருக்கிறார். அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடும், எம்.பி.க்களும் கேட்கிறார்கள். ஆனால், மன்னிப்பு கேட்காமல், காங்கிரஸ் குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.

    மூத்த தலைவர்கள் பலர் மன்னிப்பு கேட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆனால், ராகுல்காந்தி பாராளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராகுல்காந்தி இழிவுபடுத்திய ஜனநாயகம்தான் அவரை வயநாடு தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்தது. சமீபத்தில், இமாசலபிரதேசத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியது.

    ஆனால், 3 வடகிழக்கு மாநிலங்கள் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன், ராகுல்காந்தி ஜனநாயகத்தை இழிவுபடுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது.
    • நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது அவசியமானது.

    டெல்லியில் நடைபெற்ற , ஜவுளி ஆலோசனைக் குழுவுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    இந்திய பருத்திக்கு முத்திரை வழங்கப்படுவதற்கான சிறந்த தருணம் இது. இந்திய பருத்தி கஸ்தூரிக்கு முத்திரை மற்றும் சான்றளிக்கும் வகையில் தொழில்துறை முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது அவசியம். கஸ்தூரி பிராண்டட் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈர்ப்பை உருவாக்க வேண்டும். 


    இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது. இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016 இன் கீழ் பருத்தியின் தரத்தை தொழில்நுட்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கஸ்தூரி பருத்தியின் தரம், இருப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒருங்கிணந்து பணியாற்றும் தொழில்துறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

    பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை. போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க புதுமையான வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜவுளி தொழில்நுட்ப காப்புரிமைகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நவீன நெசவு இயந்திரங்கள், ஆய்வகங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.

    டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சிறப்புரையாற்றிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம். உலக தரத்திலான நவீன நெசவு இயந்திரங்கள், நவீன ஆய்வகங்கள் உள்ளிட்டவை குறித்து ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள் தங்களது ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம்.

    ஆய்வகங்களை நவீன மயமாக்குவதில் இந்திய தர நிர்ணய அமைப்பு, ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களுக்கு உதவ வேண்டும். ஜவுளி தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்.
    • தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது:

    பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

    திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
    • உற்பத்தி திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைய வேண்டும்.

    டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:

    புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடைகிறது என்று பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆற்றிய சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.

    உற்பத்தி திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்தால், உலகிற்கு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் வழங்கும் நாடாக இந்தியா மாறும். சவால் மிகுந்த கொரோனா காலத்தில் நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு தொழில்நுட்பத் துறையின் பணி பெரும் உதவிகரமாக இருந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து தொழில்நுட்பத்துறை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொருளாதார, ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா விருப்பம்.
    • இந்தியா வளர்ந்த நாடாக, நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    லாஸ் ஏஞ்செல்ஸ்:

    அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற் கொண்டுள்ள மத்திய தொழில், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவும், அமெரிக்கா இடையேயான பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது.

    குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து இந்தியா செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்.

    இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றன. விவாதத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா கலந்து கொண்டது. விநியோக சங்கிலி வரி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய நான்கு துறை வெளிப்பாடுகளில் திருப்தி தெரிவித்து இந்தியா அவற்றில் இணைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம்.

    உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும்.

    கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு கோவை மாநகரம், சிறந்த உதாரணம்.
    • குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது:

    கோவை மாநகரம் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, நூற்பாலை எந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தியில் நாட்டின் முன்னணி தொழில் மையமாக திகழ்கிறது. உலகளவிலும், ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற இடமாக கோவை திகழ்கிறது. இப்பகுதியில் உள்ளவர்களின் தொழில்முனைவு திறன் பாராட்டத்தக்கது.

    குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறையின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் கோவையில், பல்லாயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஜவுளி தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்கள் உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பதால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி இப்பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் தொழிலை மேம்படுத்தியதற்கு பாராட்டு. சவால்களை வாய்ப்பாக பயன்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் 440 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    பெருந்தொற்று பாதிப்புக்கு பிந்தைய காலத்தில் இந்திய ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருக்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்பான கியர்னி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் படி, 2026-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 81 சதவீதம் அதிகரித்து, 65 பில்லியன் டாலரை எட்டும்.

    இதன் மூலம் 7.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட்டதே இதற்கு காரணம்.

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது. அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வருவாயிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

    நாட்டில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவுக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஜவுளித்தொழில் திகழ்கிறது. இந்தியா பஞ்சு பற்றாக்குறை உள்ள நாடாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×