என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 Assembly Election"

    • திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
    • இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள், தேர்தல் அறிக்கை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முதற்கட்ட தேர்தல் அறிக்கையே வெளியாகிவிட்டது. 

    இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அக்கட்சியின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 

    'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். 


    • இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக.
    • திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்

    தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் சரத்குமார், 

    "நூறுநாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலைசெய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். திமுக எந்த நலத்திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக. இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளார்கள். தங்களின் கொள்கை, கோட்பாடை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தலுக்கு பின்தான் அவர் கட்சியை நடத்துவாரா? இல்லையா என்பது தெரியவரும். ஒரு பெண் நிர்வாகி கேட்கும்போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும். இறங்கி பேசியிருந்தால் இன்று அவர் தூக்கமாத்திரை சாப்பிடிருக்கமாட்டார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

    • 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம்.
    • அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்

    தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை கிண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் கோயல், இபிஎஸ் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

    அப்போது பேசிய பியூஷ் கோயல், "சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம். மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு.

    2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தோம். வரும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

    • மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை
    • எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் விஜய் பயணிக்கிறார்

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு சென்ற பா.ஜனதாவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாருக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், 

    "100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை மாற்றினார்கள் என்றால் பொதுவான பெயரை வைத்துள்ளார்கள். காந்தி பெயரை தூக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை எதிர் கட்சியினர் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை அறிந்து பேச வேண்டும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சொல்வதால் தான் இந்த திட்டம் அவர்களுக்கு இடிக்கிறது.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டமே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி விட்டு தி.மு.க தனது பெயரை வைத்துக் கொள்கி றது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது.

    தீபாவளி கொண்டாட மாட்டார்கள். வேறு எந்த விழாவும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி கொள்கிறார்கள். இந்துக்களை புறக்கணிப்பது தி.மு.க. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

    தேவையற்ற விஷயங்களை புகுத்துவது தவறான ஒன்று. பிறர் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக பேசக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களோடு இருக்க வேண்டும். பிறரது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செய்யக் கூடாது. தேர்தல் வரும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியும்.

    தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். விஜய்க்கு யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று தெரியவில்லை. அவர் அரசியல் பேசுகிறார். எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.

    விஜயை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.

    ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக பிரசாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது
    • மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-ல் விலகிய காளியம்மாள், புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  

    "எனது அரசியல் பயணம் மக்களை சேர்ந்து இருக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன். அவர்களுடைய பிரதிநிதியாக நிற்பேன். அதற்கான சூழல் விரைவில் வரும். வேறு கட்சிகளில் இணைவேணா என்பதற்கான முடிவை விரைவில் கூறுவேன்." என தெரிவித்தார். 

    காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
    • நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக -பாஜக கூட்டணி ஆகியவை அப்படியே தொடருமா, மாறாக இவற்றில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விலகுமா என யூகங்களும், பேச்சுகளும் இப்போதே அடிபட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளைமுதல் விருப்பமனு அளிக்கலாம் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

    "2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.

    நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த https://drive.google.com/drive/folders/1G7I1MOz3nNkgXGohJKlneblXZxDBaGVh லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

    • 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
    • இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்

    அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

    ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில்  கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.
    • தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?

    பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது.

    2024-ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

    2025ல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து, 27 ஆண்டுக்குப் பிறகு பாஜக ஆட்சி. டெல்லி போல 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்.

    திமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஊழல் மயமாகிவிட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் பணத்தை திமுக அரசு மக்களுக்கு கிடைக்காமல் செய்கிறது.

    தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.

    தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்திற்கு எதையுமே செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது.

    முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது.

    தமிழ், தமிழ் எனக்கூறும் திமுக அரசு உயர்கல்வியை தமிழ் வழியில் கொண்டு சேர்க்காதது ஏன்?

    தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?

    திமுக ஆட்சியை எப்படி அகற்றப்போகிறோம் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.
    • வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று.

    மதுரையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.

    ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.

    அமித் ஷாவால் எங்களை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவர்களை தோற்கடிப்பர்.

    2026ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல் என்றும் மறக்க முடியாதது.

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டிற்குள்ளேயே புகுந்து அழித்தோம். பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ சென்று பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது நமது ராணுவம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலை ஏற்பட்டு உள்ளது.

    வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழத்தியது போல் திமுக ஆட்சியையும் வீழ்த்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
    • தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாடு-புதுச்சேரியில் முடிந்துள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில் உள்ளார்.

    ஒரு சில தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பதவியை பறிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்க மாட்டார் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு 1½ ஆண்டுகளில் 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் வர இருப்பதால் அதற்கும் இப்போதே தி.மு.க. தன்னை தயார்படுத்த தொடங்கி விட்டது.

    அ.தி.மு.க.வில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருப்பது போன்று தி.மு.க.விலும் கொண்டு வரவேண்டும் என்று தலைமைக்கு ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

    காரணம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 5 சட்டசபை தொகுதிகளை ஒரு மாவட்டச் செயலாளர் கவனித்து வருகிறார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் இருப்பதால் அவர் முடிவு செய்வதை பொறுத்துதான் மாவட்டம் பிரிப்பது அமையும் என்று கூறி வருகின்றனர்.

    ஆனாலும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சனைக்குரிய மாவட்டங்களில் உள்ள நிலவரங்களை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள காரணத்தால் லண்டனில் இருந்து திரும்பியதும் தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்வார் என கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.


    2026 சட்டசபை தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவதற்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என்பதை உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளார்.

    அப்படி இருந்தும் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சனை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.

    தென்காசி மாவட்டம், நெல்லை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியும் செய்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுகள் கிடைத்து விட்டால் இப்போது உள்ள நிலையே தொடரும்.

    ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    அதில் ஒரு மாற்றம் தான் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம். 234 தொகுதிகளுக்கும் பாகுபாடின்றி 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நடைமுறையை தலைமை கொண்டு வந்து விடும் என்று பேசிக்கொள்கின்றனர்.

    தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர். இதில் ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் 2 சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க தி.மு.க. மேலிடம் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதற்காகவே அறிவாலயம் பக்கம் கட்சி நிர்வாகிகள் பலர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த விசயத்தில் தலையிடும் போது இளைஞரணியில் உள்ள பலருக்கு முக்கிய பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
    • தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் 8 முறை வந்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    * பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டன.

    * பா.ஜ.க. கூட்டணிக்காக மோடி, ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

    * 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 18.80 சதவீத வாக்குகள் பெற்றது.

    * 2014-ல் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி குறைவாக வாக்குகள் பெற்றது.

    * தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.

    * பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.

    * 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.

    * 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    * 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் அதி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள்.
    • கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

    2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    3-வது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின்னர் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பிரசாரம் செய்ததும் கட்சியினர் ஒருங்கிணைப்பு இல்லாததும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற வகையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போதே அனைவரும் பணியாற்ற தொடங்கி விடுங்கள்.

    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையாமல் அப்படியே தான் உள்ளது. எனவே தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றுங்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பெண் வாக்காளர்களும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதனை பயன்படுத்தி வருகிற சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். கூட்டணி பற்றி இங்கு பலரும் குறிப்பிட்டு பேசினீர்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை நான் அமைத்து வைத்திருக்கிறேன்.

    எனவே நிச்சயம் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அதனால் கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள். மாவட்ட நிர்வாகிகள் சிலர் கீழ் மட்டத்தில் உள்ள கட்சியினரை மதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் சில இடங்களில் உள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து மாவட்ட செயலாளர் கூறும் தொகுதியில் உள்ள முன்னணி நிர்வாகிகளும் கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அரக்கோணம் மாவட்ட செயலாளரான ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    23 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடைபெறும் இந்த நேர்காணல் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் நேர்காணலாக அமைந்துள்ளது.

    1999-ம் ஆண்டு அப்போது கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா இதைபோன்று நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

    அதேபோல வருகிற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 அமாவாசைகள் உள்ளன. இன்று நடந்த நேர்காணலின் போது எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறி எங்கள் அனைவருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளார். எனவே அ.தி.மு.க. வினர் உற்சாகமாக பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×