செய்திகள்

தக்கலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-03-11 10:23 GMT   |   Update On 2019-03-11 10:23 GMT
தக்கலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:

தக்கலை அருகே பனங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி (வயது 32).

சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றார். பின்னர் இரவு கோவிலில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது.

இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பீரோவில் இருந்து 4 பவுன் செயின் மற்றொரு பீரோவில் இருந்து ரூ.6,500 பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் உள்ளதா? கொள்ளையனின் உருவம் அதில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

இரணியலை அடுத்த கட்டிமாங்கோடு பகுதியில் கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது.

சம்பவத்தன்று கோவில் பூஜை முடிந்தபின்னர் பூசாரி நடையை சாத்திவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு விரைந்து வந்தார். மேலும் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். கோவிலின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

அப்போது கோவிலின் அறைக்கதவை உடைத்து உள்ளே இருந்த வெள்ளியால் ஆன சாமி முகம் 2, பித்தளை குத்து விளக்குகள் 4 மற்றும் சி.டி.பிளேயர் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலின் முன்பு இருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட இடம், கோவில் அறைக்கதவு ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக நின்ற நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News