திருப்பூர் அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி
திருப்பூர்:
திருப்பூர் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் புறப்பட்டனர்.
அமராவதிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பலியானவர்கள் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் (வயது 34), பனியன் தொழிலாளி அய்யாசாமி (45) ஆகியோர் என்பதும் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகிறார்கள்.