ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதி மூதாட்டி பலி
ஒட்டன்சத்திரம்:
பழனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு மினி லாரி வந்தது. விருப்பாட்சி பகுதியில் குறுகலான சாலையில் அதி வேகமாக வந்ததால் சாலையோரம் நின்றிருந்த ரகமதுல்லா, சரவணக்குமார், மணிகண்டன், ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத் தினர் ஒன்று கூடினர். இதனால் லாரி டிரைவர் பயந்து மீண்டும் லாரியை மிக வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் உள்ள வீட்டின் முன்பு சரோஜா (68) என்பவர் அமர்ந்திருந்தார். அவர் மீதும் லாரி மோதியதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.