search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டன்சத்திரம்"

    • திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
    • நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

    திருப்பூர் :

    சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டமானது அரசு தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்றது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. நிா்வாகிகள் தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனா். இதில், கோவை, திருப்பூா் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும், வேளாண்மை மேம்பாட்டுக்கும் உதவியாக உள்ள பிஏபி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டிஎம்சி. நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 டி.எம்.சி. நீரை ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் என்ற பெயரில் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. பிஏபி. திட்டத்தில் ஏற்கனவே ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது.மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிஏபி. தொகுப்பு அணைகளாக உள்ள வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணைஆகியவற்றுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தீா்மானம் ஊராட்சி மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஊத்துக்குளி ஒன்றியம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் வினீத் பங்கேற்றாா்.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • கடை மடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் சென்று சேர்வதில்லை.

    பல்லடம் :

    பல்லடம்,ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

    இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:- பி.ஏ.பி. பாசனத் திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜர் கொண்டு வந்தது. அன்றைய விவசாய நிலங்களை கணக்கிட்டு போடப்பட்ட திட்டம். இந்த நிலையில் ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை, பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,சூலூர்,பல்லடம்,காங்கேயம்,ஆகிய தாலுகாக்களில் உள்ள சுமார் 3,97,000 ஏக்கர் விவசாயநிலங்களில் பாசனத்திற்கும்,குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம். மழைப்பொழிவை அளவீடு செய்து, 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின்படி உப்பாறு அணை, மற்றும் வட்டமலை அணைகளுக்கு தண்ணீர் விட முடியாத பற்றாக்குறை நிலை உள்ளது.

    மேலும் கடை மடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் சென்று சேர்வதில்லை. இப்படி ஏற்கனவே பற்றாக்குறை உள்ள திட்டத்தில் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப் போவதாக அறிவித்த நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில் தற்போது இந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது விவசாயிகளை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல பல்வேறு வழிகள் இருக்க ஏற்கனவே பற்றாக்குறையில் உள்ள பி.ஏ.பி. பாசனத் திட்டத்திலிருந்து தண்ணீரை எடுப்பது என்பது இந்தப் பகுதி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது :-

    ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம்,930 கோடி ரூபாய் திட்டம் செயல் படுத்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது கொங்குமண்டல விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் சுமார் 124 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் வழியாக பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,பல்லடம்,உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கும்,பொதுமக்களுக்கு குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம். 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. ஒட்டன்சத்திரம் நகருக்கு ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து போதுமான குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது, ஒட்டன்சத்திரம் அருகே அறிவிக்கப்பட உள்ள சிப்காட்டிற்க்கும், 40க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கும் தண்ணீரை விற்பதை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்த உள்ளார்கள். இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்காகவும், தமிழ்நாடு முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்ப்பதற்காகவும், வருகிற 21-08- 2022 - ஞாயிற்றுகிழமை பி.ஏ.பி. விவசாயிகள் இணைந்து திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவிலிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி,ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி, சுமார் 20,000 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது.

    அனைத்து தடைகளையும் தாண்டி, விவசாயிகளை மிகப் பெரிய அளவில் திரட்டி, வெற்றிகரமாக பேரணி நடத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்து, ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு ரத்து செய்யும் வரை தொடர்ச்சியாக அனைத்து வகையான போராட்டங்களிலும் ஈடுபடுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது அந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டிருப்பது. விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தூக்குத் தண்டனை கைதிக்கு கூட அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் வழக்கமுள்ள நாட்டில், விவசாயிகளின் கோரிக்கையை கேட்டுவிட்டு, அதற்கு பதில் தராமல் திட்டத்தை அறிவிக்கும் அரசை என்ன சொல்வது, இதுதான் விவசாயிகளின் மீது அரசு காட்டும் அக்கறையா?, இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் முடிவுஎடுத்திருக்க மாட்டார். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர் அறிவித்து இருக்கக்கூடும். ஏனென்றால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் விவசாய நிலங்களுக்கு முறையாக தண்ணீர் கொடுக்க முடியவில்லை இந்த நிலையில் எப்படி ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் வழங்க முடியும்.எனவே இந்தத் திட்டத்தை கைவிட்டு பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விரைவில் பல்லடத்தில் உள்ள பி.ஏ.பி. திட்ட அலுவலகம் முன்பு விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தலைமையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
    • பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

    பல்லடம் :

    பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில், அணையில் தண்ணீர் இருக்கும்போதே, தண்ணீர் இல்லை என்று கூறி அதிகாரிகள் பாசனத்துக்கான தண்ணீரை நிறுத்துகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு எவ்வாறு தண்ணீர் வினியோகிக்க முடியும் ? பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர்.இதில் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வினியோகித்தால், பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

    எனவே பி.ஏ.பி., பாசன விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இதை கண்டித்து, வரும் ஜூன் 27-ந் தேதி அன்று பொள்ளாச்சி, உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) ஆழியாறு, மற்றும் திருமூர்த்தி அணை மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தற்போது கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையில் ஏற்கனவே காவேரி ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் இரு கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரத்து செய்து விட்டு, ஆழியாறு மூலம் திட்டம் செயல்படுத்தப் படுவதாக தெரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆழியாற்றின் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

    ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டிற்கு 2.44 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் நீர்பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசனப் பகுதி விவசாயிகள் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பொள்ளாச்சியில், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்பாட்டத்தை நடத்தினர்.இதே போல் திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து உடுமலைப்பேட்டையில் ஆலோசனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து வரும் 27 -ந் தேதி பொள்ளாச்சியில், ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் 137 பாசன சபைகளைச் சேர்ந்த விவசாயிகள்,ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×