search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ottanchaththiram"

    • பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) ஆழியாறு, மற்றும் திருமூர்த்தி அணை மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தற்போது கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையில் ஏற்கனவே காவேரி ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் இரு கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரத்து செய்து விட்டு, ஆழியாறு மூலம் திட்டம் செயல்படுத்தப் படுவதாக தெரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆழியாற்றின் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

    ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டிற்கு 2.44 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் நீர்பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசனப் பகுதி விவசாயிகள் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பொள்ளாச்சியில், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்பாட்டத்தை நடத்தினர்.இதே போல் திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து உடுமலைப்பேட்டையில் ஆலோசனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து வரும் 27 -ந் தேதி பொள்ளாச்சியில், ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் 137 பாசன சபைகளைச் சேர்ந்த விவசாயிகள்,ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×