search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ottanchatram"

    • ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • கடை மடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் சென்று சேர்வதில்லை.

    பல்லடம் :

    பல்லடம்,ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

    இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:- பி.ஏ.பி. பாசனத் திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜர் கொண்டு வந்தது. அன்றைய விவசாய நிலங்களை கணக்கிட்டு போடப்பட்ட திட்டம். இந்த நிலையில் ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை, பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,சூலூர்,பல்லடம்,காங்கேயம்,ஆகிய தாலுகாக்களில் உள்ள சுமார் 3,97,000 ஏக்கர் விவசாயநிலங்களில் பாசனத்திற்கும்,குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம். மழைப்பொழிவை அளவீடு செய்து, 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின்படி உப்பாறு அணை, மற்றும் வட்டமலை அணைகளுக்கு தண்ணீர் விட முடியாத பற்றாக்குறை நிலை உள்ளது.

    மேலும் கடை மடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் சென்று சேர்வதில்லை. இப்படி ஏற்கனவே பற்றாக்குறை உள்ள திட்டத்தில் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப் போவதாக அறிவித்த நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில் தற்போது இந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது விவசாயிகளை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல பல்வேறு வழிகள் இருக்க ஏற்கனவே பற்றாக்குறையில் உள்ள பி.ஏ.பி. பாசனத் திட்டத்திலிருந்து தண்ணீரை எடுப்பது என்பது இந்தப் பகுதி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது :-

    ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம்,930 கோடி ரூபாய் திட்டம் செயல் படுத்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது கொங்குமண்டல விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் சுமார் 124 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் வழியாக பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,பல்லடம்,உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கும்,பொதுமக்களுக்கு குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம். 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. ஒட்டன்சத்திரம் நகருக்கு ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து போதுமான குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது, ஒட்டன்சத்திரம் அருகே அறிவிக்கப்பட உள்ள சிப்காட்டிற்க்கும், 40க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கும் தண்ணீரை விற்பதை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்த உள்ளார்கள். இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்காகவும், தமிழ்நாடு முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்ப்பதற்காகவும், வருகிற 21-08- 2022 - ஞாயிற்றுகிழமை பி.ஏ.பி. விவசாயிகள் இணைந்து திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவிலிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி,ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி, சுமார் 20,000 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது.

    அனைத்து தடைகளையும் தாண்டி, விவசாயிகளை மிகப் பெரிய அளவில் திரட்டி, வெற்றிகரமாக பேரணி நடத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்து, ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு ரத்து செய்யும் வரை தொடர்ச்சியாக அனைத்து வகையான போராட்டங்களிலும் ஈடுபடுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது அந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டிருப்பது. விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தூக்குத் தண்டனை கைதிக்கு கூட அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் வழக்கமுள்ள நாட்டில், விவசாயிகளின் கோரிக்கையை கேட்டுவிட்டு, அதற்கு பதில் தராமல் திட்டத்தை அறிவிக்கும் அரசை என்ன சொல்வது, இதுதான் விவசாயிகளின் மீது அரசு காட்டும் அக்கறையா?, இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் முடிவுஎடுத்திருக்க மாட்டார். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர் அறிவித்து இருக்கக்கூடும். ஏனென்றால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் விவசாய நிலங்களுக்கு முறையாக தண்ணீர் கொடுக்க முடியவில்லை இந்த நிலையில் எப்படி ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் வழங்க முடியும்.எனவே இந்தத் திட்டத்தை கைவிட்டு பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விரைவில் பல்லடத்தில் உள்ள பி.ஏ.பி. திட்ட அலுவலகம் முன்பு விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தலைமையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×