செய்திகள்
திமுக ஆட்சிக்கு வந்தால் தான் உள்ளாட்சி தேர்தல் வரும்- கே.என்.நேரு பேச்சு
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும். மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று கேஎன் நேரு பேசினார். #knnehru #dmk
காட்டுப்புத்தூர்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்ப்பட்டி ஊராட்சி பாலசமுத்தி ரத்திலும், அரசலூர் ஊராட்சி திரு நாராயணபுரத்திலும் தி.மு.க. சார்பில் மாதிரி கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பாலசமுத்திரம் பகவதியம்மன் கோவில் அருகே நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தி.மு.க மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல். ஏ.வுமான கே.என்.நேரு தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருச்சி வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பாலசமுத்திரம் வக்கீல் ப.சரவணன் வரவேற்றார். தி.மு.க மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச் சரும் எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேரு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது:-
நடந்துக்கொண்டிருக்கும் ஆட்சி பொதுமக்களுக்கு விரோதமான ஆட்சி. பொதுமக்கள் ரேசன் கடையில் தேவையில்லாத பொருள்களை தருவதாக கூறினார்கள். நாங்கள் போகின்ற கிராமசபை கூட்டத்தில் அனைத்திலும் பொதுமக்கள் இக்குறையையும் சாலை வசதி, குடிநீர் வசதி,ரேசன் கடை உள்பட பல்வேறு குறைகளை எங்களிடம் கூறி வருகின்றனர்.
உள்ளாட்சி அமைப்பு இருந்தால் இந்த பிரச்சினைகளை அந்த ஊராட்சி தலைவரிடம் கூறலாம். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும். மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார். #knnehru #dmk