செய்திகள்
சங்கரன்கோவிலில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை
சங்கரன்கோவிலில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கக்கன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரதாப் (வயது 29). இவரின் மனைவி காளியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்களாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரதாப் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பிரதாப் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரதாப் மனவேதனையில் தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.