செய்திகள்

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2019-01-05 05:39 GMT   |   Update On 2019-01-05 05:39 GMT
நெய்வேலியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கூனங்குறிச்சி பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவிக்கும், நெய்வேலி ஊ.மங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி விஜய்(வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவியை விஜய் ஏமாற்றி தனது மோட்டார் சைக்கிளில் ஆதண்டார்கொல்லை சாம்பல் ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார்.

பின்னர் அந்த மாணவியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி மாணவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விஜய்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நெய்வேலி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் கல்லூரி மாணவியை மோட்டார் சைக்கிளில் விஜய் அழைத்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து விஜயை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த விஜய் தலைமறைவாகி விட்டார்.

இதைத்தொடர்ந்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்தர்ராஜ், அம்பேத்கார், சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் விஜயை பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை விஜயும், கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விஜயையும், கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News