செய்திகள்

டாஸ்மாக் கடையில் ரகளை- நண்பர்கள் 4 பேர் கைது

Published On 2019-01-02 11:45 GMT   |   Update On 2019-01-02 11:45 GMT
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ரகளை செய்த நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி:

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது‌. நேற்று இரவு டாஸ்மாக் கடையினை பூட்டிய நேரத்தில் 4 வாலிபர்கள் கடைக்கு வந்து மது வேண்டும் என கேட்டுள்ளனர்.

அப்போது கடை ஊழியர் இப்ராகிம்சா ( வயது 40), கடையை மூடிவிட்டோம், இனி மதுபானங்கள் கிடையாது என கூறியுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அவர்கள் கடையின் முன்பு நின்று தகராறு செய்தனர். அப்போது கடை ஊழியர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல், கடை ஊழியரை தாக்கினர்.

இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் ரகளையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்.

இது குறித்து கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குளித்தலை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (23), மணப்பாறையை சேர்ந்த ராஜா (29), சிறுகமணியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (25), அல்லித்துறையை சேர்ந்த முருகானந்தம் (25) என்பது தெரியவந்தது. 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News