செய்திகள்

புத்தாண்டில் மதுகுடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

Published On 2019-01-02 11:14 GMT   |   Update On 2019-01-02 11:14 GMT
முதலியார்பேட்டையில் புத்தாண்டில் மதுகுடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை அனிதாநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரத்தீஸ் யுமணன் (18) என்ற மகனும், தேவகி (13) என்ற மகளும் உள்ளனர்.

கனகராஜ் முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியில் பூக்கடை நடத்தி வருகிறார். மகேஸ்வரி திப்புராயப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று புத்தாண்டையொட்டி மகேஸ்வரி கணவரிடம் மாலை கோவிலுக்கு செல்ல வேண்டும். அதனால் கடையை சீக்கிரம் பூட்டி விடுங்கள் என கூறினார். இதையடுத்து மகேஸ்வரியும், தனது குழந்தைகளும் கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் இரவு 8 மணிக்கு கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.

இதை கண்ட மகேஸ்வரி புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல இருக்கும் நேரத்தில் இன்றும் மது குடித்து வந்துள்ளீர்களே? என கணவனை திட்டினார். இதனால் மன வருத்தம் அடைந்த அவர் மேல் மாடிக்கு சென்று படுத்து கொண்டார்.

பின்னர் மகேஸ்வரி குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார்.

மனைவி திட்டியதால் சோகத்தில் இருந்த கனகராஜ் அங்கு மின் விசிறி கொக்கியில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மனைவி- குழந்தைகள் மேல் மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டது. தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News