செய்திகள்

தண்டராம்பட்டில் விவசாயி அடித்து கொலை மகன் கைது

Published On 2018-12-29 14:54 GMT   |   Update On 2018-12-29 14:54 GMT
தண்டராம்பட்டில் விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு விக்னேஷ் (20) என்ற மகனும், கவுசல்யா, லாவண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். கவுசல்யாவுக்கு திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் வழக்கம் போல் சுந்தர்ராமன் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.

நள்ளிரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயா நிலத்துக்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது சுந்தர்ராமன் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

இறந்த சுந்தர்ராமனின் மகன் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளார். இவர் அடிக்கடி அவரது தந்தை சுந்தர்ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என சுந்தரராமன் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, விக்னேஷ் தான் தந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தந்தையை எந்த காரணத்திற்காக கொலை செய்தார். எப்படி கொலை சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News