திருமங்கலம் அருகே விபத்து - தொழிலாளி பலி
பேரையூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்று இருந்தார்.
வேலையை முடித்து விட்டு செல்வராஜ் மதுரை ஆவின் நகரை சேர்ந்த வேல்முருகன் (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிளை வேல்முருகன் ஓட்டி வந்தார். மறவன்குளம் மதுரை மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பஸ் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த செல்வராஜ் தவறி கீழே விழந்தார். தலையில் பலத்தக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வம் என்பவரை கைது செய்தார்.
திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் ஓச்சாதேவர் (70). இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியா வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஓச்சாதேவரின் 2 கால்களும் துண்டானது.
அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.