செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் 575 பேர் நியமனம்

Published On 2018-12-25 22:09 GMT   |   Update On 2018-12-25 22:09 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். #kamalHassan
சென்னை:

கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்கின்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி, தெளிவாகவும் நேர்மையாகவும், தொலைநோக்குப்பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்று நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனத்தினை அறிவித்திருக்கின்றோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவருக்கும் பலமுறை பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கின்றேன். அதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன். எனவே அதை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றவேண்டும்.

சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் இந்த பொறுப்பினை, உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #kamalHassan
Tags:    

Similar News