செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-12-24 03:10 GMT   |   Update On 2018-12-24 03:10 GMT
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #TN #Pondicherry
சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே மழைக்கான அறிகுறியுடன் ரம்மியமான சூழல் காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரையிலும் மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆணைக்காரன் சத்திரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சிதம்பரம், சேத்தியாதோப்பு, ராமநாதபுரத்தில் தலா 3 செ.மீ., ராமேசுவரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார் கோவில், மன்னார்குடி, சென்னை விமான நிலையம், சீர்காழி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், நெய்வேலியில் தலா 2 செ.மீ., குடவாசல், வலங்கைமான், வானூர், நன்னிலம், நீடாமங்கலம், நாகை, மயிலாடுதுறை, வந்தவாசி, திருச்செந்தூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம், பாபநாசம், உத்திரமேரூர், ஆலங்குடி, திருவாடானையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. #Rain #TN #Pondicherry
Tags:    

Similar News