செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே வேன்-அரசு பஸ் மோதி 30 பயணிகள் படுகாயம்

Published On 2018-12-21 11:04 GMT   |   Update On 2018-12-21 11:04 GMT
அருப்புக்கோட்டை அருகே வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டிப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பேராளி கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேனில் சென்றனர்.

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர்கள் நேற்று இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர். வேனை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமியாபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேனின் முன்டயர் திடீரென வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன், சென்டர் மீடியனில் மோதியது. அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பஸ் வேன் மீது மோதியது.

இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் மகேந்திரனின் 2 கால்களும் முறிந்தது. மேலும் வேனில் இருந்த ராஜலட்சுமி, சுப்பையா, பாப்பாத்தி, ருக்குமணி, ஜெயமணி உள்பட 30 பேர் காயமடைந்தனர். மகேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News