நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீருக்கு அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மணல் கடத்தும் கும்பலை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி சித்தர்கள் நத்தம் சுடுகாட்டு பகுதியில் வைகை ஆற்று படுகையில் ஒரு கும்பல் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது. இதை பார்த்தகிராம நிர்வாக உதவியாளர் விளாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கும்பலில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மணல் அள்ளிய செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெரியசாமி, செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.