வாட்ஸ்-அப்பில் அவதூறு- சீமான் மீது போலீசில் புகார்
ராஜாக்கமங்கலம்:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்திற்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அய்யப்ப பக்தர்களை விமர்சித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன.
நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானும் அய்யப்பபக்தர்களை விமர்சித்து குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அகில பாரத இந்து மகாசபா தலைவர் தமிழ்வாணன் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.
அதில், அய்யப்ப பக்தர்களை அவதூறாக பேசி வாட்ஸ்-அப்பில் கருத்து பதிவிட்ட சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஈத்தாமொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். #seeman #sabarimala