சபரிமலை விவகாரத்தில் இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் கலாசாரத்தை இழக்க நேரிடும் - ஜீயர் பேட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விசித்திரமாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.
முல்லை பெரியாறு போன்ற பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சபரிமலை வழக்கில் மட்டும் அவசரம் ஏன்? கஜா புயல், கேரள வெள்ள பாதிப்பு என அனைத்துக்கும் கலாசாரத்தை மீறியது தெய்வ குற்றமே காரணம்.
சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் . ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும். சபரிமலை பிரச்சினையில் மத்திய அரசும், கேரள அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து கலாசாரத்தின் அடிப்படையில் தந்திரி சொல்வது போல அனைத்து பெண்களும் நடந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரச்சினைகள் வராது.
சபரிமலைக்கு பெண்கள் நான் செல்வேன், நீ செல்வேன் என்பது பெருமையல்ல. கலாசாரத்தை காப்பாற்ற இந்துக்கள் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும். இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் கலாசாரத்தை இழக்க நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Sabarimala