செய்திகள்

திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 400 பேர் கைது

Published On 2018-10-30 15:56 GMT   |   Update On 2018-10-30 15:56 GMT
திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். உணவூட்டு மானியத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தை கடந்த 25-ந்தேதி தொடங்கினர்.

நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் டவுன் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 400 பேரை கைது செய்தனர். 
Tags:    

Similar News