செய்திகள்
நாகமலை புதுக்கோட்டையில் ஐகோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரை ஐகோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை சுப்பிர மணியசிவா தெருவைச் சேர்ந்தவர் ராஜையா (வயது56). இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராஜையா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தொண்டிக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜையா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.