செய்திகள்
திருச்சி விமான நிலையம் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

தினகரனை நான் சந்தித்ததாக கூறுவது கடந்தகாலம்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-10-05 04:28 GMT   |   Update On 2018-10-05 04:28 GMT
டி.டி.வி.தினகரனை நீங்கள் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம் அது கடந்த காலம் என்று தெரிவித்தார். #OPanneerSelvam #TTVDhinkaran #EdappadiPalaniswami
திருச்சி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன், நேற்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு, டி.டி.வி.தினகரனை முதல்- அமைச்சர் ஆக்குவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக தெரிவித்தார். இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று மதுரையில் நடந்த இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இரவு ஓ.பன்னீர்செல்வம் திருச்சி வந்தார். திருச்சியில் இரவு தங்கியிருந்த அவர், இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள், தங்க தமிழ்செல்வன் பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது பேட்டியை முழுமையாக படிக்கவில்லை என்றும், படித்த பிறகு இதற்கு பதில் அளிப்பதாக கூறினார்.


மீண்டும் நிருபர்கள் தினகரனை நீங்கள் சந்தித்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சென்னைக்கு சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் விரிவாக பேசுகிறேன் என்றார். தொடர்ந்து நிருபர்கள் விடாமல் அவரிடம் டி.டி.வி.தினகரனை நீங்கள் பார்த்தீர்களா? என்றதற்கு, அது கடந்த காலம் என்று தெரிவித்தார்.

மேலும் மழை பாதிப்புகளை தடுக்க, முழுமையான நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து விட்டு சென்றார். #OPanneerSelvam #TTVDhinkaran #EdappadiPalaniswami
Tags:    

Similar News