செய்திகள்
நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். #ChennaiRain
சென்னை:
மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
இதற்கிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும். எனவே மீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதிக்கு நாளையும், நாளை மறுநாளும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவது சென்னைவாசிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. #ChennaiRain