செய்திகள்

ஊழலை பற்றி பேச முக ஸ்டாலினுக்கு தகுதி இல்லை- வைத்திலிங்கம் எம்பி பேச்சு

Published On 2018-09-16 10:29 GMT   |   Update On 2018-09-16 10:29 GMT
எல்லாவற்றிலும் ஊழல் செய்துவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்பி பேசினார். #mkstalin #vaithilingammp

தஞ்சாவூர்:

முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திரைப்பட நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., பால் வளத்தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன், ஒன்றியச் செயலாளர்கள் துரைவீரணன், தனபால், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தம்பித்துரை, ஒன்றிய துணைத் தலைவர் இளவரசி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி., பேசும் போது கூறியதாவது:-

மத்தியில் நடந்த காங்கிரஸ் கட்சியில் திட்டமிட்டு நாடகமாடி 1½ லட்சம் ஈழ தமிழர்களை கொன்று குவித்தனர். ராஜபக்சே தற்போது சொல்கிறார் அந்த போரில் எங்களுக்கு இந்திய அரசு உதவியது என்று, இந்திய அரசு என்றால் காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க.வும் தான். இவர்கள் தமிழ் இனத்துக்கே துரோகம் இழைத்து வே‌ஷம் போட்டு வருகின்றனர்.

எல்லாவற்றிலும் ஊழல் செய்துவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. நான் சட்டமன்றத்தில் பலமுறை ஸ்டாலினுடன் நேருக்குநேர் ஊழல் பற்றிய விவாதத்தை பேசி இருக்கிறேன்.


இந்தநிலையில் மொழி பற்றி பேசுவதற்கும், தமிழ் இனத்தை பற்றி பேசுவதற்கும், குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கும், தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை. தி.மு.க. இப்போது கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. குடும்ப உறுப்பினர்களே பொறுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. தினமும் ஒரு அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பற்றி பேசி வருகிறது. இதை எல்லாம் தமிழக மக்கள் மறந்து விடமாட்டார்கள். மறைந்த ஜெயலலிதா நீதிமன்றம் சென்று நிரபராதி என்று நிரூபிப்பதற்குள் அவரை சூழ்ச்சி செய்து விட்டார்கள்.

அவரை சூழ்ச்சி செய்தவர்கள் இப்போது சந்தியில் நிற்கிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை அவரது ஆத்மா சும்மா விடாது. இப்போதும் அவர்கள் அதனை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தையும், ஜெயலலிதாவின் ஆட்சியையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தினகரனோ இல்லை ரஜினி, கமல், ஸ்டாலின் என்று யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆட்சி ஜெயலலிதா கூறியது போன்று இன்னும் 100 ஆண்டுகாலம் எழுச்சியோடு செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #vaithilingammp #congress

Tags:    

Similar News