செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது வழக்கு

Published On 2018-09-06 17:38 GMT   |   Update On 2018-09-06 17:38 GMT
திருக்கோவிலூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்துள்ள மணலூர் பேட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையாக இருப்பதால் இங்கிருந்து மணல் கடத்தல் நடைபெற்று வந்தது.   

இதனை தடுக்க மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் இரவு பகலாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜம்படை கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 29), தணிகைவேல் (37) ஆகியோர் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரனை கண்டித்து ஜம்படை பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் போஸ்டர் ஒட்டினார்கள். 

இது குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஜம்படை கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போஸ்டர் ஒட்டிய தட்சிணாமூர்த்தி மற்றும் தணிகைவேல் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News