திருநாவுக்கரசர் பா.ஜ.க.வுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்லது- இளங்கோவன் பேட்டி
திருச்சி:
திருச்சி சமயபுரத்தில் இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2,3 நாட்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இன்னும் இருக்கிற திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியை பற்றியும், வாஜ்பாய் பற்றியும் சிறப்பாக பேசியிருந்தார். வாஜ்பாய் எவ்வளவு உயர்ந்த மனிதர், பி.ஜே.பி எவ்வளவு உயர்ந்த கட்சி என்று மிக சிறப்பாக பேசியிருந்தார். அதை படித்த பின்னர் தான் எனக்கே வாஜ்பாய் பற்றி அதிகம் தெரியவந்தது. இவ்வளவு நல்லவரான வாஜ்பாயை விட்டு திருநாவுக்கரசர் வெளியே வந்தது தவறு. மீண்டும் அவர் வாஜ்பாய் இருந்த பா.ஜ.க. கட்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நல்ல கட்சியை விட்டு ஏன் வந்தார் என்பது தெரியவில்லை. இன்னும் கூட காலதாமதம் ஆக வில்லை. மீண்டும் அவர் அக்கட்சிக்கு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
எனக்கு பாலம் உடைகிறது, தகர்க்கப்படுகிறது என்பதை பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. புதிய பாலம் கட்டி கமிஷன் பார்ப்பதற்காக ஆளும் கட்சி அமைச்சர்களே இதனை செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. இப்போது தான் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை ஆரம்பித்து உள்ளது.
வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் இன்னும் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #thirunavukkarasar #bjp