செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கலாம் - பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

Published On 2018-08-22 16:19 GMT   |   Update On 2018-08-22 16:19 GMT
கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் பெருந்துயர் களைய நிவாரண பொருட்கள் வழங்க பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் பெருந்துயர் களைய இயன்ற உதவி செய்திட பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரும் பங்காற்றிட வேண்டுகிறேன். அவர்களுக்கு உதவிட தாங்கள் தங்களால் இயன்றவரை நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக தாசில்தாரிடம் வழங்கிட கேட்டுக்கொள் கிறேன். கேரள மக்களுக்கு உதவிட நமது மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. எனவே அதுபோன்று அணுகுவோரை தவிர்த்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் வேலாண்மை அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு வேட்டி, சேலை, நைட்டி, துண்டு மற்றும் ஆண், பெண், குழந்தைகள் பயன் படுத்தும் வகையிலான துணி வகைகள், அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி வகைகள், டீ, காபி, மசாலா பொருட்கள், சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய், மெழுகுவர்த்தி, டார்ச், பேட்டரிகள், தீப்பெட்டி, வாளிகள், குவளைகள், பேஸ்ட், பிரஸ், மருந்து வகைகள், பால் பவுடர், ஸ்டவ் அடுப்பு போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கிடவும். பயன்படுத்திய பழைய பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 04328-224455 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News