செய்திகள்

கும்பகோணம் அருகே சாப்பாடு போடாத மனைவி மீது தீ வைத்த கணவன்

Published On 2018-08-10 14:14 GMT   |   Update On 2018-08-10 14:14 GMT
டி.வி.பார்த்து கொண்டிருந்த மனைவியை சோறு போடுமாறு கணவர் அழைத்ததால் அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தீ வைத்துக்கொண்டார்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருண்மொழி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சிவானந்தம் மது குடித்து விட்டு வீட்டுக்கு போதையில் வந்தார். அப்போது அருண்மொழி வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது பசியில் இருந்த சிவானந்தம் மனைவியிடம் ‘சோறு போடும்படி‘’ கூறினாராம். ஆனால் இதை கவனிக்காமல் அருண்மொழி டி.வி.யை சுவாரஸ்சியமாக பார்த்து கொண்டிருந்தார்.

இதனால் போதையில் இருந்த சிவானந்தத்துக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

அப்போது சிவானந்தம் வீட்டில் பாட்டிலில் இருந்த மண்எண்ணையை தனது வாயில் ஊற்றிக்கொண்டு பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகம் அருகில் கொப்பளித்தார்.

அப்போது அருண்மொழி முகம், தலை மீது தீ ‘குபீர்’ என பிடித்தது. இதில் தீயில் கருகி அவர் அலறி கூச்சல் போட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவானந்தம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News