செய்திகள்

மணல் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா?- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Published On 2018-08-06 21:32 GMT   |   Update On 2018-08-06 21:32 GMT
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரியசக்தி மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்று தமிழக அரசிடம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #ChennaiHighCourt #TNGovernment
சென்னை:

ஐகோர்ட்டில் ஏ.சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், கங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு ஆற்றில் சட்டவிரோதமாக பலர் மணல் அள்ளுகின்றனர். எனவே, மணல் கொள்ளையை தடுக்க இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த கிராமங்களில் ஜூலை 22-ந்தேதி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டபோது எடுத்த புகைப்படங்களையும் ஐகோர்ட்டில் சமர்பித்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் புகைப்படத்தை எப்போது எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கூறும் இடங்களில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். 2017-18-ம் ஆண்டுகளில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 783 லாரிகள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.



மேலும் அவர், ‘2016-17-ம் ஆண்டுகளில் 120 லாரிகள், 60 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 84 ஆயிரத்து 330 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரணி, சேத்துப்பட்டு தாசில்தார்கள் இரவு-பகலாக அங்கு திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்’ என்றும் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விளக்கத்தை பார்க்கும்போது, மனுதாரர் கூறும் இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது என்று தெரிகிறது. எனவே, இந்த பகுதியில் சூரியசக்தியை கொண்டு இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்பது குறித்து அக்டோபர் 1-ந்தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #ChennaiHighCourt #TNGovernment
Tags:    

Similar News