செய்திகள்

தர்மாபுரியில் சொத்து தகராறில் மருமகளை தாக்கிய மாமனார் கைது

Published On 2018-07-03 11:57 GMT   |   Update On 2018-07-03 11:57 GMT
தர்மாபுரியில் சொத்து தகராறில் மருமகளை தாக்கிய மாமனார் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

புதுவை தர்மாபுரி வழுதாவூர் சாலையில் வசித்து வருபவர் ராஜ்மோகன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது தங்கை சபீதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்மோகனின் தந்தை சங்கரதாஸ் (வயது61) தனது பெயரில் உள்ள வீட்டை ராஜ்மோகனின் பெயரில் எழுதி வைத்து சபீதாவுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கூறினார்.

ஆனால் ராஜ்மோகன் தங்கை சபீதாவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரதாஸ் வீட்டை பாகம் பிரித்து சபீதாவுக்கு கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் ராஜ்மோகன் இதற்கு மறுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ராஜ்மோகன் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி சாதனா (23) மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது சங்கரதாஸ், அவரது மனைவி சிவகாமி, மகள் சபீதா ஆகியோர் ராஜ்மோகன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டை பாகம் பிரித்து கொடுப்பது குறித்து அவர்கள் சாதனாவிடம் கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கரதாஸ், சிவகாமி மற்றும் சபீதா ஆகிய 3 பேரும் சேர்ந்து சமையல் கரண்டியால் சாதனாவை தாக்கினர்.

இதுகுறித்து சாதனா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சங்கரதாசை கைது செய்தனர். மேலும் சிவகாமி, சபீதா ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News