செய்திகள்

சேலத்தில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை

Published On 2018-06-27 17:02 GMT   |   Update On 2018-06-27 17:02 GMT
சேலத்தில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்:

சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய முகத்தின் ஒரு பகுதி சிதைந்திருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சொன்றனர். தண்டவாள பகுதியில் வாலிபரின் உடல் கிடந்ததால் அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசாரும் அங்கு வந்தனர்.

இதையடுத்து அவர்கள், இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அப்போது வாலிபரின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதனால் இந்த கொலை தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் விசாரிக்குமாறு ரெயில்வே போலீசார் கூறிவிட்டு சென்று விட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் மோப்பம் பிடித்து அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரின் கழுத்தில் கயிறு அல்லது வயரால் இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் அவரை மர்ம ஆசாமிகள் வேறு ஒரு இடத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் அதை மறைப்பதற்காக தண்டவாளத்தில் உடலை வீசி சென்றிருக்கலாம்‘ என்பது தெரியவந்தது.

அதிகாலையில் சென்ற ரெயில் அந்த வாலிபரின் முகத்தில் ஏறி சென்றதால் அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் நீலம், கருப்பு, வெள்ளை நிறங்களுடன் கூடிய டி-சர்ட்டும், சந்தன கலர் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் கொலையுண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தால் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் சென்ற பயணிகள் ரெயில் நடுவழியில் நின்றது. இந்த ரெயில் அரை மணி நேர கால தாமதத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 
Tags:    

Similar News