செய்திகள்

கோட்டாரில் பெண்ணிடம் 37 பவுன் நகை திருட்டு- டிரைவர் கைது

Published On 2018-04-23 15:25 GMT   |   Update On 2018-04-23 15:25 GMT
கோட்டாரில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 37 பவுன் நகை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை ஆசாத்நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மனைவி பாத்திமா (வயது 54).

தக்கலையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு பாத்திமா நேற்று சென்று இருந்தார். அதன்பிறகு அங்கிருந்து அவர் பஸ் மூலம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் வந்தார். பிறகு அவர் அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் தனது வீட்டிற்கு பயணம் ஆனார்.

அப்போது பாத்திமா தனது கையில் ஒரு பை வைத்திருந்தார். அந்த பையில் 37 பவுன் தங்க நகை இருந்தது. வீட்டிற்கு சென்றதும் அவர் தான் வைத்திருந்த நகை பையை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டு சென்று விட்டார்.

வீட்டிற்கு சென்ற பிறகு தான் பாத்திமாவிற்கு ஆட்டோவில் நகை பையை தவற விட்டது நினைவுக்கு வந்தது. உடனே அவரும் அவரது உறவினர்களும் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று அந்த ஆட்டோ டிரைவர் பற்றி விசாரித்தனர்.
ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அங்கு இல்லை. மேலும் அவரை பற்றி யாருக்கும் சரியான தகவலும் தெரியவில்லை. இதனால் கோட்டார் போலீசில் பாத்திமா புகார் செய்தார். கோட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் அன்புபிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் அண்ணா பஸ் நிலைய ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று விசாரித்தபோது பாத்திமா பயணம் செய்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் பெயர் முருகன் (49), மேல கிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முதலில் நகை பையை பார்க்கவில்லை என்று மறுத்துள்ளார். போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அவர் தான் பாத்திமாவின் நகை பையை திருடினார் என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து ஆட்டோ டிரைவர் முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 37 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News