செய்திகள்

குலசேகரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-04-23 15:12 GMT   |   Update On 2018-04-23 15:12 GMT
குலசேகரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குலசேகரம்:

குலசேகரத்தை அடுத்த மங்கலம். இடைக்கட்டான் கரையை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி இவரது மகன் சுஜித் (வயது 20). ஐ.டி.ஐ. படித்து விட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.

சானல்கரை அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுஜித் தூக்கிவீசப்பட்டார். அவரது தலை சாலையோர தடுப்பில் மோதி மூளை சிதறியது.

ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த சுஜித் அந்த இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். விபத்தை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சிந்தாமணி மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த சுஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே சுஜித் விபத்தில் இறந்த தகவல் அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் இறந்து கிடந்த சுஜித்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு நின்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. விபத்து தொடர்பாக குலசேகரம் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News