அய்யலூர் சந்தையில் தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென சந்தை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான கொம் பேறிபட்டி, புத்தூர், அம்மாணி யூர், வளவிசெட்டிபட்டி, பஞ்சம்தாங்கி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கிருந்து அய்யலூர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் விலை கடுமையாக வீழ்ந்தது. கிலோ ரூ.1-க்கு விற்பனையானதால் விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டனர்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், தக்காளி தேவை அதிகரித்துள்ளதாலும் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.80-க்கு விற்ற 14 கிலோ பெட்டி தக்காளி தற்போது ரூ.120 முதல் ரூ.150 வரை விலைபோனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் விலை உயரக்கூடும் என்பதால் ஆர்வத்துடன் தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.