search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை"

    • பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு 1 கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.8 வரை மட்டுமே கிடைக்கிறது.

    கிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    தக்காளி விலை கடந்த சில மாதங்களில் உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் மத்திய, மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதனை கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60 வரை விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வு காரணமாக விவசாயிகள், தக்காளிகளை அதிகளவில் பயிரிடத் தொடங்கினர். இதன் காரணமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.

    உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் மொத்த விலைக்கு கொள்முதல் செய்யும் போது ரூ.10-க்கும் குறைவாக விலை கேட்கின்றனர்.

    இதனால் விவசாயிகளுக்கு பயிர் கூலி மற்றும் கூலி ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய கூலி கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு நேற்று எடுத்துச் சென்ற போது மிகவும் குறைந்த விலையில் மட்டுமே விலை போனதால் மனவேதனை அடைந்தார். இதையடுத்து தக்காளியை விற்பனை செய்யாமல் காந்திநகர் பகுதியில் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுக்கு தீவனமாக போட்டு சென்றார்.

    இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கும் தேவையான தக்காளியை எடுத்து சென்றனர்.

    • ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    திருப்பதி:

    தக்காளி வரத்து கடந்த மாதம் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ரூ.200க்கு விற்பனையான தக்காளி தற்போது 3 ரூபாயாக குறைந்து உள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள பியாபலி சந்தைக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    விவசாயிகள் எதிர்பார்த்த அளவு தக்காளி விலை போகாததால் தக்காளி பறிக்கும் கூலி மற்றும் போக்குவரத்து செலவு கூட மிஞ்சவில்லை எனக்கூறி தக்காளியை சாலையோரங்களில் கொட்டி சென்றனர். ஒரு சில விவசாயிகள் தக்காளியை பறித்து தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.

    • கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் இடையே போட்டி போடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தை தொட்டது.

    தங்கத்தின் விலை போல தக்காளி விலையை தினசரி கேட்டு வாங்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாக உள்ளது.

    இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

    இதனால் தக்காளி விலை கிலோ 200-க்கு மேல் விற்பனையானது. தக்காளி விவசாயிகள் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள். இதனால் தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் அளவிற்கு நிலைமை இருந்தது.

    தக்காளி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வந்த வியாபாரிகளிடம் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களும் அரங்கேறின. கடையில் புகுந்து தக்காளி திருட்டு தோட்டத்திற்குள் புகுந்து தக்காளிகளை பறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவாக வரத்து இருந்த தக்காளி தற்போது தினமும் 300 டன்னுக்கு அதிகமாக வரத்தொடங்கி உள்ளது. இதனால் தற்போது கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.

    ஆந்திராவின் அன்னமய்யா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தக்காளி காய்களாக உள்ளன. இன்னும் 2 வாரத்தில் இந்த தக்காளிகள் பழமாக மாறிவிடும்.

    கிட்டத்தட்ட இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது தக்காளி கிலோ விலை ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என கணித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-

    இந்த காரி பருவத்தில் அதிக அளவில் தக்காளிகளை பயிரிட்டுள்ளோம். இந்த மாத இறுதியில் அதிக அளவு தக்காளி அறுவடை செய்யப்படும். அப்போது தக்காளி விலை மிக குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுவது தவிர வேறு வழியில்லை என்றார்.

    மிகப்பெரிய உச்சம் தொட்ட தக்காளி தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

    கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க... இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா என்ற வசனங்களுடன் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.

    • கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
    • மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    போரூர்:

    தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.200வரை விற்கப்பட்டது.

    இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை குறைந்த அளவே பயன்படுத்தும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர்.மேலும் தக்காளி விலை உயர்வு காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் ஆகியவை அதிரடியாக நிறுத்தப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 55 முதல் 60 லாரிகள் வரை தினசரி தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்தமாதம் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து 25 லாரிகளாக குறைந்ததால் விலை திடீரென அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

    இதனால் கடந்த வாரத்தில் தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. இதனால் தக்காளியின் விலை மேலும் சரிந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் சரிய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
    • தக்காளி வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக பட்சமாக 160 ரூபாய் வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை சரிந்து நேற்று முன்தினம் , முதல் தர தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும்விலை உயர்ந்து ஒரு கிலோ முதல் தர தக்காளி 80 ரூபாய்க்கும், 2-ம் தரம் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    மற்ற காய்கிறிகளில் விலை விவரம் வருமாறு-

    சின்னவெங்காயம் 60 முதல் 80, கேரட் 100-120, கத்திரி 40-60, பச்சை மிளகாய் 100-120, வெண்டைக்காய் 40-50, உருளை கிழக்கு 40-60, பெரிய வெங்காயம் 25-30, பீன்ஸ் 100-110, முருங்கைக்காய் 40-60, இஞ்சி ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    • ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10, 15 லாரிகளில் வந்த தக்காளி இப்போது 40 லாரிகளில் வருகிறது.

    போரூர்:

    ஏழை மக்களை 2 மாதமாக மிரட்டி வந்த தக்காளி விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்தது மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாதித்ததால் தக்காளி வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு குறைந்த அளவில் தக்காளி வந்ததால் சில்லரை காய்கறி கடைகளில் விலை உச்சத்தை அடைந்தது. இதனால் பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்தனர்.

    100 கிராம், 200 கிராம், கால் கிலோ என வாங்கும் அளவை குறைத்தனர். ஓட்டல்களில் தக்காளி சாதம், சட்னி போன்றவை காணாமல் போனது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 10, 15 லாரிகளில் வந்த தக்காளி இப்போது 40 லாரிகளில் வருகிறது. இதனால் விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிலோ ரூ.120, ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.100-க்குள் குறைந்தது. மொத்த விலையில் கிலோ ரூ.60 ஆக இருந்த தக்காளி நேற்று முன்தினம் ரூ.50 ஆக குறைந்தது.

    இன்று மேலும் 15 ரூபாய் குறைந்ததை தொடர்ந்து சில்லரையில் கிலோ ரூ.60, ரூ.70-க்கு ஒரு சில இடங்களில் விற்கப்படுகிறது.

    இன்று 40 லாரிகளில் தக்காளி வந்ததால் விலை மேலும் சரிந்துள்ளது.

    கோயம்பேடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தக்காளி விலை குறைந்த அளவிற்கு சென்னையின் மற்ற பகுதிகளில் விலை குறையவில்லை. காய்கறி கடை வியாபாரிகள் இன்றும் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கிறார்கள்.

    மொத்த மார்க்கெட்டில் குறையும் போது சில்லரை விற்பனையிலும் குறைக்க வேண்டும். ஆனால் ஒரு சில சில்லரை வியாபாரிகள் விலையை குறைக்காமல் விற்பது பொதுமக்களை பாதிக்கிறது. தக்காளியை தொடர்ந்து பிற காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது.

    • சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், நேபாளத்தில் இருந்து 10 டன் தக்காளியை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளது. அந்த தக்காளி, இன்றும், நாளையும் உத்தரபிரதேசத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

    வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    • தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
    • மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு விளையும் தக்காளியை உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு, தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் சரிந்ததால் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் நடவு செய்து, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்த விலையில் கிலோ 180 ரூபாய் வரை விற்றது.

    இந்நிலையில் தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது இயல்பை விட கூடுதல் பரப்பளவில் தக்காளி சாகுபடியாகி வருகிறது. மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகப்பட்சமாக ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விலை நிலவியது.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும்.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை சரிந்து வருகிறது.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகள் என்ற அளவிலேயே தக்காளி வரத்து இருந்தன.

    இப்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.

    மேலும் தக்காளி வரத்தும் கடந்த சில நாட்களாக சராசரியாக 35 லாரிகளாக வரத் தொடங்கியது.

    இதற்கிடையே இன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. விலை அதிகரிப்புக்கு பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் தக்காளி வரத்து 40 லாரியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தக்காளி விலை மேலும் குறைந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200 வரை சென்று உச்சம் தொட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை மேலும் படிப்படியாக குறைந்து வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'திடீர்' மழை மற்றும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்தால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து உள்ளதால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளிலும் தக்காளி விலை குறையத்தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்து இருந்தது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை குறையத்தொடங்கி விட்டன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. மற்ற பச்சை காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கு கீழ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×