செய்திகள்
லால்குடி அருகே 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
லால்குடி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் 2 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி:
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த நடராஜபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் அன்னதானம். இவருடைய மகன் தினேஷ்குமார்(வயது 28). இவருக்கு திருமணமாகி கவுரி(24) என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தினேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அதனை கவுரி பல முறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று மாலையும் வழக்கம் போல தினேஷ்குமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அதனை கவுரி கண்டித்ததால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால், வீட்டில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தினேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.