ஆஸ்பத்திரியில் நோயாளிபோல் காத்திருந்து பெண் டாக்டரிடம் நகை பறிப்பு
அம்பத்தூர்:
அண்ணாநகர் ‘டி’ பிளாக்கில் வசித்து வருபவர் அமுதா. டாக்டர். இவர் வீட்டின் அருகே கிளினிக் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அமுதா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தார். அப்போது வாலிபர் ஒருவரும் சிகிச்சை பெறுவதற்காக முன்பக்க அறையில் காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த வாலிபர் அமுதாவின் அறைக்குள் சென்றார். திடீரென அவர் அமுதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 பவுன் நகையை பறித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அறையின் வெளியே காத்திருந்த நோயாளிகள் கொள்ளையனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவனை அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் திருவள்ளூரை அடுத்த கண்டிகை பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பது தெரிந்தது. இதேபோல் அவன் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டானா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.