செய்திகள்
கொலை செய்யப்பட்ட பெரியசாமி பிணமாக கிடக்கும் காட்சி.

மரக்காணம் அருகே வாலிபர் கடத்தி வெட்டிக்கொலை

Published On 2018-04-16 11:29 GMT   |   Update On 2018-04-16 11:29 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வாலிபர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது குரும்பரம். இது காட்டுப்பகுதியாகும்.

இன்று காலை அந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்த வாலிபரின் தலையில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அந்த பகுதியில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த வாலிபரின் சட்டை பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த ஆதார் அட்டையில் பெரியசாமி (30), மரக்காணம் தாலுகா சிறுவாடி என்ற முகவரி இருந்தது.

அந்த வாலிபரை யாராவது மர்ம மனிதர்கள் கடத்தி கொண்டு வந்து கொலை செய்து விட்டு காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபரை கொன்று பிணத்தை காட்டில் வீசிய மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

காட்டுப்பகுதியில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News