செய்திகள்

புதுவை சண்முகாபுரத்தில் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

Published On 2018-03-20 11:24 GMT   |   Update On 2018-03-20 11:24 GMT
புதுவை சண்முகாபுரத்தில் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). கூலித் தொழிலாளி. இவருக்கு சரளா என்ற மனைவியும், சக்திவேல் (20) என்ற மகன் மற்றும் பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

சக்திவேல் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பவித்ரா லாஸ் பேட்டை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ரவி சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை சரளா பல முறை கண்டித்தும் ரவி மது பழக்கத்தை கைவிடவில்லை. ஒரு சில நாட்கள் வீட்டுக்கு வராமல் ரவி மதுக்கடையிலேயே தூங்கி விடுவார்.

அதுபோல் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் இருந்த ரவி நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை மனைவி சரளா வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ரவி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இந்த நிலையில் சண்முகா நகர் மாணிக்க செட்டியார் நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள 4 முனை சந்திப்பில் உள்ள ஒரு மளிகை கடை வாயிலில் ரவி ரத்தவெள்ளத்தில் இன்று காலை பிணமாக கிடந்தார். அருகில் செங்கற்கள் நொறுங்கி கிடந்தன. யாரோ மர்ம நபர்கள் ரவியை செங்கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தை போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ரவியின் சட்டை பாக்கெட்டில் ரூ.200 இருந்தது. இதனால் பணத்துக்காக இந்த கொலை நடை பெறவில்லை என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News