செய்திகள்
ஈ.சி.ஆரில் விதிகளை மீறி பங்களா கட்டிய கமல் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு சிக்கல்
சென்னை ஈசிஆரில் விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டியதாக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் சொகுசு பங்களா கட்டியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த பகுதியில் பங்களாக்கள் கட்டியுள்ளனர். இதில், உரிய விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 138 வி.ஐ.பி.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதில், கமல்ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பங்களாக்களும் அடக்கம் ஆகும். #TamilNews